தீயசக்திகளின் கைக்கூலி திருமாவளவன்… அதற்கு அல்லாஹூ அக்பர் எனக் கூறியதே உதாரணம் : எச். ராஜா கடும் விமர்சனம்

Author: Babu Lakshmanan
11 February 2022, 7:53 pm
Quick Share

சென்னை : தீய சக்திகளின் கைக்கூலி என்பதற்கு எடுத்துக்காட்டு திருமாவளவன் நாடாளுமன்றத்தில் அல்லாஹ் அக்பர் என்று கூறியதாக பாஜக பிரமுகர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டின் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சென்னையில் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டதிலிருந்து நம்பிக்கையை அதிகரித்துள்ளது. சென்னையில் மிகப்பெரிய மாற்றத்தை பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்தும் என்ற அறிகுறி தென்படுகிறது.

கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு இருப்பது திமுக ஆட்சியில் புதிதில்லை. 2007இல் ஆற்காடு வீராசாமி அறிக்கைவிட்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காரைக்குடியில் எனது வீடு கூட 2007ல் தாக்கப்பட்டது. திமுகவில் ரவுடிசம் என்பது டிஎன்ஏவில் கலந்துவிட்டது.

காவல்துறையினர் பெட்ரோல் குண்டு வீசுவதை தடுக்கவில்லை. ஆனால், தண்ணீரை ஊற்றித் தடயத்தை அழித்துவிட்டனர். ஒரே நாள் இரவில் பாரதிய ஜனதா கட்சியின் வாகனங்கள் தாக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளது. ஏதோ மிகப்பெரிய சதி திமுக அரசால் தீட்டப்படுகிறது. திமுகவினரை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள். 2007 இல் நடந்தது போன்று இருக்க மாட்டோம். 2007ல் ஒரு சில இடங்களில் திருப்பி அடித்தோம்.

பெட்ரோல் குண்டு வீசியவன் நீட் தேர்வுக்காக பெட்ரோல் குண்டு வீசியதாக கூறுகிறான். அவனுக்கும் நீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறையாக தேர்தலை நடத்தாவிட்டால் பின் விளைவுகளை தற்போதைய அரசு சந்திக்கும். ஹிஜாப் விவகாரத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தியது யார்..? 13 வருடங்களாக செயல்பட்டு வரும் பள்ளியில் ஹிஜாப் போடாமல் திடீரென்று 6 பேர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கான காரணம் என்ன…? இது மத உணர்வு பிரச்சனையாக கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பிய பெண்ணின் அரைகுறை படங்கள் சமூக வலைதளங்களில் வருகிறது. இது மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல் பட்டிருக்கிறார்கள். இது வேண்டுமென்றே மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற காட்டுமிராண்டிகளின் செயல். நான் ஹிஜாபை எதிர்க்கவில்லை. அவர்களின் மத உணர்வையும் எதிர்க்கவில்லை.

ஏற்றத்தாழ்வுகள் உடையில் இருக்கும் வேறுபாடு குழந்தையின் மனதில் பதிந்துவிடும் என்பதற்காகத்தான் காமராஜர் காலத்தில் சீருடை கொண்டு வரப்பட்டது. சீருடையை விசயத்தில் மீறுபவர்களை பள்ளிக்கூடத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்தால்கூட சரிதான். மத பிரச்சினையை தூண்டுவதற்காக ஒரு சமூக தீய சக்தி செயல்பட்டு வருகிறது. திருமாவளவன் ஏன் பார்லிமென்டில் அல்லாஹுஅக்பர் என்று சொல்கிறார். மனிதனா அவர், எல்லாத்திலும் அரசியல் பண்ணுவாரா..? தீய சக்திகளின் கைக்கூலி என்பதற்கு எடுத்துக்காட்டு திருமாவளவன் பார்லிமெண்டில் அல்லாஹ் அக்பர் என்று கூறியதுதான், எனத் தெரிவித்தார்.

Views: - 904

0

0