இந்தியாவுல யாருக்கும் இந்த மாதிரி நடக்கல.. CM ஸ்டாலினுக்கு இப்படி ஒரு நிலைமையா..?
அண்ணாமலையின் ரிப்போர்ட்!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 3:50 pm
Annamalai Vs Stalin - Updatenews360
Quick Share

திருச்சி : இந்தியாவில் எந்த தலைவருக்கும் நடக்காத ஒரு விஷயம், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடந்திருப்பது பரிதாபம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெறும் திருமணத்திற்காக கலந்து கொள்ள சென்னையிலிருந்து திருச்சிக்கு விமான மூலம் வருகை தந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் பேசியதாவது:- பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்தகால பட்ஜெட் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்குவார்கள் என்பது எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கை.

கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து என்ன பேசினோம் என்பதை வெளியில் கூறுவது நாகரிகமல்ல. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தி.மு.க கூட்டணியை எதிர்க்க கூடிய வகையில் இந்த கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் (தென்னரசு) பலமான, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பது தான். எனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதால் 13 மீன்பிடி கிராமங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க அரசு சிலை வைப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறது. இது குறித்து நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டம் அரசு நடத்தியதா அல்லது தி.மு.க நடத்தியதா என தெரியவில்லை. அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் சிலை வேண்டாம் என தான் பேசியுள்ளார்கள். அரசு மக்களின் கருத்தை மதித்து செயல்பட வேண்டும்.

இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 60 சதவீதமாக இருந்த ஆதரவு, கடந்த 6 மாதத்தில் 44 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் இப்படியொரு சரிவு எந்த அரசியல்வாதிக்கும் வந்ததில்லை. 2024 தேர்தலுக்குள் அது 20 சதவீதமாக குறையும். தி.மு.க தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்த போகிறது. இடைத்தேர்தல் என்பது எந்த கட்சியின் பலத்தையும் நிரூபிப்பதற்கானது அல்ல. பேனா சிலை விவகாரத்தில் தமிழர்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அ.தி.மு.க., இ.பி.எஸ் அணி கூட்டணி பெயரை மாற்றி இருப்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 493

0

0