ஈரோட்டு மக்கள் மீது திமுகவுக்கு பயம்… அதனால் தான் பரிசு பொருட்களை அள்ளி வீசுகின்றனர் : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 10:30 am
Quick Share

மதுரை : திமுக அரசு மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளது.

மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்பி என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கி வைத்துள்ளேன். மத்திய அரசின் அதிகளவிற்கு பெண் பயனாளிகள் தான் பயன்பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களும் பயனாளிகள் தான்.

பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் அடிப்படையில் பெண்களை மையப்படுத்தி ஆட்சியை நடத்தி வருகிறார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு என்பது திமுக மக்களுக்கு திட்டங்கள் செய்துள்ளதால் ஓட்டு போடுவார்கள் என்றால், எதற்காக வாக்காளர்களுக்கு பரிசுபொருட்களை வழங்கி மக்களை அடைத்து வைக்கின்றனர். மக்களை சுற்றுலா அழைத்து செல்வது போன்ற புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். திமுக அரசின் மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளது. அதனை சரிகட்ட பார்க்கிறது. ஆனால் அது நடக்காது, தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும்.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் தமிழக அரசு தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் சிறுமி கூட்டு பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். மருத்துவக் கல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து தீர்ப்பாக மாறாது. உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள். நீட் தேர்வு தீர்ப்பு வரும்போது பார்த்துகொள்ளலாம், என்றார்.

Views: - 280

0

0