அண்ணாமலையை மிரட்டிப் பார்ப்பது திமுகவுக்கு நல்லதல்ல… உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை : நாராயணன் திருப்பதி வார்னிங்!!

Author: Babu Lakshmanan
31 October 2022, 3:39 pm
Quick Share

சென்னை : கோவை குண்டுவெடிப்புக்கு காரணம் முழுக்க முழுக்க மாநில உளவுத்துறையின் தோல்விதான் என்றும், ஜமேசா முபின் கார், வெடிபொருள்கள் வாங்கியதை உளவுத்துறையினர் கண்காணித்திருக்க வேண்டும் என்று பாஜக ஊடகப் பொறுப்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு மாநில உளவுத்துறையும், மாநில அரசும்தான் காரணம். குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை அவதூறாக பேசிய நபர் மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அந்த நபரை கைது செய்ய வலியுறுத்தியும், நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மகளிரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார்.

நேற்று அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி கோவை குண்டு வெடிப்பு குறித்து பல விசயங்களை கூறியதுடன் அண்ணாமலை குறித்து அவதூறான, தரக்குறைவான, ஆபாசமான கருத்தினை பேசியுள்ளார். ஆளுங்கட்சி தலைமை அலுவலகத்தில், அகில இந்தியளவிலான கட்சியின் தலைவர் குறித்து அவ்வாறு பேசியதுதான் திராவிட மாடல்.

பாஜக மகளிரணி நிர்வாகிகள் குறத்து ஆபாசமாக பேசியவர்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்களை ஆபாசமாக, தரக்குறைவாக பேசுவது திமுகவிற்கு புதிதல்ல. கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் அப்படித்தான் பேசி வருகின்றனர். திமுக ராஜீவ்காந்தி இரு மாதம் முன்பு ஒரு இனத்தையே அழித்திருக்க வேண்டும் என்று பேசினார். கோவை குண்டு வெடிப்பில் கோமாளித்தன அரசியலை அரங்கேற்றுவது திமுகதான்.

2019ல் ஜமேசா மூபின் விசாரிக்கப்பட்டு போதுமான ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். என்றாலும் அவர் ஐஎஸ்ஐஎஸ் – இயக்கத்தை சார்ந்த நபர் என்று தமிழக புலனாய்வு அமைப்பிற்கு அப்போதே என்ஐஏ கூறியதால் தமிழக காவல்துறை அவரை தங்களது கடமைப்படி கண்காணித்திருக்க வேண்டும்.

19.7.22ல் தமிழக உளவுத்துறை சார்பில் தமிழகத்தின் அனைத்து காவல்நிலையங்களுக்கும் கண்காணிக்க வேண்டிய 96 பேர் பட்டியலை அனுப்பினர். அதில் 89வது பெயராக ஜமேசா முபின் பெயர் இருந்தது. என்ஐஏ கூறியதன் அடிப்படையில் தமிழக உளவுத்துறை இந்த தகவலை பெற்றிருந்தது.

96 பேரையும் தமிழக உளவுத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனரா..? முபின் கார் வாங்கியது, வெடி பொருள் சேகரித்தை எப்படி கண்காணிக்காமல் விட்டனர். 30.7.22ல் தமிழக உளவுத்துறை சார்பில், காவல்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் அப்பாவி ஏழை இசுலாமிய இளைஞர்களை பணத்தாசை காட்டி அல்கொய்தா, isis அமைப்புகளின் பெயரில் மூளைச்சலவை செய்வதாக குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தனர். பண்டிகை காலங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

திமுகவில் பேசுவதற்கு ஆள் இல்லாமல் சீனியர்களை அனுப்பாமல் ராஜீவ்காந்தி வந்து நேற்று பேசினார். கோவையை பதற்றமாக இருப்பதாக கூறி அங்கு தொழில் வளர்ச்சியை தடுக்க அண்ணாமலை முயற்சிப்பதாக கூற திமுகவிற்கு தகுதியில்லை. கோவைக்கு துரோகமிழைத்து வருகிறது திமுக. சிறுவாணி அணை மூலம் கோவைக்கு குடிநீர் வழங்க கூட துப்பு இல்லாத கட்சி திமுக.

காமராசர் , எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஆபாசமாக பேசியதுபோல் இப்போது அண்ணாமலையை திமுகவினர் அவதூறாக பேசுகின்றனர். கனிமொழி மீது திமுகவிற்கு மரியாதை இருந்தால், கனிமொழியே மன்னிப்பு கேட்கும் வகையில் பேசிய நபர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நபர் கைது செய்யப்பட வேண்டும்.

குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் நான்கு பேர் குறித்து அவதூறாக பேசிய நபரை கைது செய்ய வலியுறுத்தியும், திமுகவை கண்டித்தும் நாளை மாலை 3 மணிக்கு பாஜக மகளிரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், அண்ணாமலை பங்கேற்பார்.

ஆளுநர் திருக்குறள், சனாதானம் குறித்து பேசுவதை திமுகவினர் விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அண்ணாமலை குறித்து தனிப்பட்ட தாக்குதலை திமுக நடத்துவது அக்கட்சிக்கு நல்லதல்ல. திமுகவினருக்கு இது தொடர்பாக முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்.
ஐபிஎஸ் ஆக இருந்த அண்ணாமலையை மிரட்டிப் பார்க்கும் வேலை வேண்டாம். வேண்டுமானால் அண்ணாமலை மீது வழக்கு தொடருங்கள்.

திமுகவின் அடிமைகளாக, அடிவருடிகளாக இருக்கும் திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை கண்டித்து பேசுவது தவறு. கோவை குண்டுவெடிப்பு முழுக்க முழுக்க மாநில உளவுத்துறையின் தோல்விதான். சட்டம் ஒழுங்கை கண்காணிப்பது மாநில அரசின் வேலைதான். மாநில உளவுத்துறை ஜூலை மாதம் வெளியிட்ட 96 பேரையும் பரிந்துரைத்தது என்ஐஏ தான். 3 மாதம் முன்பு இவ்வாறு எச்சரிக்கை வந்த பின்னும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மத்திய உளவுத்துறை ஐமேசா முபின் பெயரை குறிப்பிட்டு மாநில அரசுக்கு சுற்றறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்று திமுகவினர் சொல்வது பொய். கோட்டை ஈஸ்வரன் அருளால் தமிழக அரசுக்கும் , முதலமைச்சருக்கும் நல்லது நடந்துள்ளது. கார் குண்டு வெடித்திருந்தால் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

100 ஆண்டுகளாக இருந்து வரும் குஜராத் பாலம் 7 மாதங்களாக சீரமைக்கப்பட்டு 4 நாள் முன்புதான் திறக்கப்பட்டது. அதிக சுமை காரணமாகவே அந்த பாலத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அரசியலாக்கினால் அது அவர்களது அனுபவமின்மையே காட்டும், என்று கூறினார்.

Views: - 314

0

0