சாதிய கொடுமை தலைவிரித்தாடுது, அவங்க கட்சியினர் என்பதால் நடவடிக்கை இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 6:05 pm
Annamalai STalin - Updatenews360
Quick Share

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
பணி மூப்பு அடிப்படையில் தனக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு கோரி சுடலைமாடன், உடன்குடி பேரூராட்சி தலைவரின் உறவினரும், முன்னாள் பேரூராட்சித் தலைவியுமான ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோரை அணுகியுள்ளார்.

ஆனால் பதவி உயர்வுக்கு சுடலைமாடனிடம் பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டுள்ளார். அதற்கு சுடலை மறுப்பு தெரிவிக்கவே, சாதி பெயரை கூறி சுடலையை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுடலைமாடன் கடந்த 17ஆம்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுடலை மரணத்திற்கு காரணமான பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி ஆயிஷா கல்லாஸி, ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த சுடலைமாடன் தற்கொலை செய்துள்ளார்.

திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எளிய மக்கள் மீதான ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது.
குற்றவாளிகள் தங்கள் கட்சிக்காரர்கள் என்பதால் அவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கைக் கையாளுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மீண்டும் இது போன்ற ஜாதியக் கொடுமைகள் நடக்காத வண்ணம், உடனடியாக குற்றவாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்: தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 272

0

0