மத்திய அரசு ஒரு போதும் அனுமதியளிக்க கூடாது : மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 1:31 pm
Megahdad - Updatenews360
Quick Share

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேகதாது அணை தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில், காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியை பெறாமலும், மத்திய அரசின் எந்த வித அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் செயலுக்கு கடும் கண்டனத்தை இந்த பேரவை தெரிவித்து கொள்கிறது.

மத்திய அரசு கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எந்த விதமான தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்தவித அனுமதியும் அளிக்க என மத்திய அரசை வலியுறுத்தி இந்த பேரவை கேட்டு கொள்கிறது.

காவிரி நதிநீர் பிரச்சனை ஒரு நீண்ட கால பிரச்சனையாக உள்ளது. இதற்கு தீர்வாக கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை இரு மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சனை.

அதனால் கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரி படுக்கையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எந்த வித புதிய நீர்தேக்கத் திட்டத்தை மற்ற படுகை மாநிலங்களின் அனுமதயில்லாமல், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ள கூடாது என கர்நாட அரசுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை இந்த சட்டமன்றம் கேட்டுக்கொள்கிறது.

2018 மே மாதம் 18ம் தேதி உச்சநீதிமன்றம் ஆணைப்படி, 2018 பிப்ரவரி மாதம் 16ம் தேதி அளித்த தீர்ப்பினை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீரிதமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாத, அணையை மேகதாமுவில் கட்ட கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகள் நலனை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்து கொள்கிறது என்று தமிழக சட்டப்பேரவை இன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார். இந்த தீர்மானத்தின் மீது அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் பேசினர். மேகதாது அணை கட்ட எந்த சூழ்நிலையிலும் கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும் பேசினர். இதனையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

Views: - 583

0

0