சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. நாடகமாடும் ஓபிஎஸ் மகன் ; எம்.பி ரவீந்திரநாத்தை கைது செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 3:21 pm
Quick Share

தேனி : தோட்டத்தில் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்பியுமான ஓ.பி. ரவீந்திரநாத்தை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் அருகே உள்ள கோம்பை எனும் வனப்பகுதியை ஒட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ப.ரவீந்திரநாத்திற்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. அந்த நிலங்களை சுற்றி சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், கடந்த 27ம் தேதி சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்ததாகவும், அதனை மீட்க முயன்ற வனத்துறையினர் முயன்ற போது, வன உதவிப் பாதுகாவலர் மகேந்திரன் என்பவரை தாக்கி விட்டு சிறுத்தை காட்டுக்குள் தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மறுநாள் அதே இடத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து விட்டதாக தகவல் வந்தது.

இதனையடுத்து, சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு உடனடியாக எரிக்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் 28ம் தேதி தோட்டத்தில் தற்காலிகமாக “ஆட்டுக்கிடை”அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் தான் சிறுத்தையை கொன்றதாக கூறி அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கால்நடை வளர்ப்பு சங்கத்தினர், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில், தோட்டத்தின் உரிமையாளர் அமைத்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிர் இழந்திருக்கலாம் என்றும், அதனை மறைப்பதற்காகவே நிலத்தின் உரிமையாளரும், வனத்துறையினரும் கூட்டு சேர்ந்து நாடகமாடி வருவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எம்பி ரவீந்திரநாத் தோட்ட மேலாளர்கள் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ,சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நட்த்தினர்.

அப்பாவி விவசாயியை வனத்துறையினர் கைது செய்ததைக் கண்டித்தும், நில உரிமையாளரான ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Views: - 510

0

0