அடுத்தடுத்து அதிர்ச்சி.. சென்னை பாஜக ஐடி விங் கூண்டோடு ராஜினாமா..? அதிமுகவில் இணைய முடிவு..!!

Author: Babu Lakshmanan
8 March 2023, 2:10 pm
Quick Share

சென்னை பாஜக ஐடி விங் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் பாஜகவினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேவேளையில், உட்கட்சி பூசலும் நாளுக்கு நாள் வெடித்து வருகிறது. தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் காயத்ரி ரகுராம் விலகியதை அடுத்து, தற்போது ஐடி விங்க் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், கட்சியின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

அண்ணாமலை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திய பிறகு, அவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, மேலும் இரு பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர்.

அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சற்று அதிருப்தியடையச் செய்துள்ளது.

இந்த நிலையில், சென்னை பாஜக ஐடி விங் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் பாஜகவினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஓரத்தி அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அனைவருக்கும்‌ வணக்கம்‌, கட்சியில்‌ சில காலமாக அசாதாரன சூழ்நிலை நிலவி வந்த நிலையில்‌ ஒரு சில தினங்களாக பலர்‌ என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில்‌ அழைக்க முற்படும் பொழுது சிலருக்கு விளக்கம்‌ அளிக்க முடியாத நிலை உருவாகிறது.

ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாஜக-வில்‌ பயணித்துள்ளேன்‌. அதில்‌ கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான்‌, பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன்‌ அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும்‌ தெரியும்‌,

என்‌ பணிகளை அனைவரும்‌ அறிவீர்கள்‌ என்று நம்புகிறேன்‌. இத்தனை காலம்‌ எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும்‌ புகார்களையும்‌ எவ்வாறு தான்‌ எதிர்கொண்டேன்‌ என்று எண்ணி பார்க்கையில்‌ எனக்கே வியப்பாக இருக்கின்றது. தகுதியற்றவன்‌ என்று கூறி தரம்‌ பிரிக்கும்‌ சுயநலக்காரர்களின்‌ சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம்‌ இருந்து காத்துக்‌ கொள்ளும்‌ பரிகாரம்‌ ஆகவே இதை செய்கிறேன்‌.

நிச்சயமாக தி.மு.க-வில்‌ இணையமாட்டேன்‌. திமுக-வை விமர்சிக்கவே பாஜக-வில்‌ இருந்து விலகுகிறேன்‌, தொடர்ந்து என்‌ மீது அன்பு காட்டி வரும்‌ நல்ல உள்ளங்கள்‌ அனைவருக்கும்‌ என்‌ உளம்பூர்வான நன்றிகள்‌. என்னுடன்‌ கட்சியில்‌ இணைந்து பணி செய்து வரும்‌ அன்பு சகோதரர்களின்‌ எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும்‌ வகையிலும்‌ அவர்களது வலியுறுத்தலின்‌ பேரிலும்‌ அன்புக்குரிய தலைவர்‌ CTR நிர்மல்‌ குமார்‌ அவர்களுடன்‌ அரசியல்‌ பாதையில்‌ பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் விலகல் மற்றும் இணைவால் அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னை மேற்கு மாவட்ட ஐடி விங் நிர்வாகிகள் கூண்டோடு விலகியது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 452

0

0