ஓபிஎஸ்-க்கு மீண்டும் பெருத்த அடி… அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பு.. பட்டாசு வெடித்து கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்..!!

Author: Babu Lakshmanan
28 March 2023, 10:53 am
EPS Ops - Updatenews360
Quick Share

சென்னை : அதிமுக பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலையும் இபிஎஸ் தரப்பினர் நடத்தி முடித்து விட்டனர். பொதுச்செயலாளர் பதவிக்கு இபிஎஸ்ஸை தவிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் புது மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதாவது, அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காகவும் விசாரிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலர் தேர்தல் ஆகியவற்றிற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்மூலம், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கம் செய்து நீதிபதி உத்தரவை பிறப்பித்ததுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்தார். இதனிடையே, ஓபிஎஸ் தரப்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு நாளையே இருநீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவின் 16 தீர்மானங்கள் பின்வருமாறு :-

அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்

இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பொறுப்பு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை நடைபெற உள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட கோரும் தீர்மானம்

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து கட்சி வளர்ச்சி குறித்து முடிவு எடுத்தல்

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்ட அரசின் வரலாற்று வெற்றிகளுக்கும் பாராட்டு

அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம்

இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம்

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்

நெசவாளர் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம், தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Views: - 247

0

0