கொன்று உடலை எரித்துவிட்டு மறைப்பதுதான் சமூக நீதியா..? திராவிட மாடல் ஆட்சியா..? கொந்தளிக்கும் சீமான்…

Author: Babu Lakshmanan
23 April 2022, 8:15 pm
Quick Share

சென்னை : காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை, திருவல்லிக்கேணியில் வாகனப்பரிசோதனையின்போது கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட தம்பி விக்னேஷ் அவர்கள் காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காவல்துறை மரணங்களும், அதனை மூடி மறைத்து காவல்துறையினரைக் காப்பாற்ற முயலும் திமுக அரசின் போக்குகளும் கடும் கண்டனத்திற்குரியது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படும் இளைஞர்கள் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதுமான கொடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22, அன்று விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சத்தியவான் தஞ்சாவூர், மேற்கு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். செப்டம்பர் 17 அன்று விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சேலம், கிச்சிபாளையம் கார்த்திக், ஆத்தூர் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

டிசம்பர் 09 அன்று விசாரணை சிறைவாசியாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சீனிவாசன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவ்வாண்டு, சனவரி 11 அன்று கைதுசெய்யப்பட்டு நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் சிறைக்குள்ளேயே உயிரிழந்தார். பிப்ரவரி 04 அன்று நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த சுலைமான் என்பவர் விசாரணையின்போது உயிரிழந்தார். இதேபோல, கடந்தாண்டு டிசம்பர் 04. அன்று முதுகுளத்தூர் அருகே வாகனச்சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர், கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு, வீடு திரும்பிய அன்று நள்ளிரவே திடீரென உயிரிழந்தார். இவையெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டுக்காலத்திற்குள் நடைபெற்ற காவல்நிலைய மரணங்களாகும்.

கடந்த சனவரி 14 அன்று, முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக, சென்னை, கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வைத்து, சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரகீம் மீது நடத்தப்பட்ட மிகக்கொடூரமான கொலைவெறித்தாக்குதல், மாணவரின் முன்யோசனையால் காணொளிப்பதிவு செய்யப்பட்டு, வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவங்களின் நீட்சியாகவே கடந்த ஏப்ரல் 18 அன்று, தலைமைச் செயலகக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட, கடற்கரையில் குதிரை ஓட்டும் பணிபுரியும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தம்பி விக்னேஷ் காவல்துறையால் தாக்கப்பட்டு, உயிரிழந்தக்கொடுமை நிகழ்ந்துள்ளது.

தம்பி விக்னேசின் உடலில் காயங்கள் இருந்துள்ளதும், அவசர அவசரமாக காவல்துறையே உடலை எரித்துள்ளதும் காவல்துறையினர் மீதானக் குற்றஞ்சாட்டின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. உடற்கூறாய்வு செய்யப்பட்டப் பிறகு, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டியதுதானே காவல்துறையினரின் வேலை? அதற்கு நேர்மாறாக, அவர்களது குடும்பத்தினரைச் செய்தியாளர்கள் சந்தித்துவிடாதவண்ணம் தடுத்து, தாங்களே முன்னின்று உடலை எரியூட்டும் வேலையைச் செய்தது எதற்காக? உத்திரப்பிரதேச மாநிலம், ஹாத்தரசில் நடந்ததற்கும், இதற்கும் இடையே என்ன வேறுபாடு? இவ்வளவுதான் மனித உயிர்க்கு மதிப்பா? ஏழைகளின் உயிரென்றால் மலிவாகப் போய்விட்டதா திமுக அரசுக்கு? இதுதான் சமூக ஆட்சியின் இலட்சணமா?

எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது சாத்தான்குளம் இரட்டைப்படுகொலை வழக்கில் நீதிகேட்டு உரிமைக்குரல் எழுப்பிய மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது தமது ஆட்சிக்காலத்தில் நடைபெற்று வரும் தொடர் சிறை மரணங்களைத் தடுக்கத் தவறியது ஏன்? தனது துறையின் கீழ்வரும் காவல்துறையால் ஒரு ஏழை எளிய கூலித்தொழிலாளிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து ஒருவாரமாகியும் இதுவரை வாய்திறக்காது மௌனித்திருப்பது எதனால்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நீதி? ஆளுங்கட்சியாக வந்தவுடன் இன்னொரு நீதியா? காவல்துறையால் நிகழ்த்தப்படும் மரணங்களைக் கொலைவழக்காகப் பதிவுசெய்ய மறுப்பது பெரும் அநீதி இல்லையா?

கடந்தாட்சியில் அதிமுக செய்ததற்கும், இப்போது திமுக செய்வதற்கும் இடையே என்ன வேறுபாடு? மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீதான துறைரீதியான நடவடிக்கையே போதுமான தண்டனைதானென நினைத்துவிட்டாரா முதல்வர் ஸ்டாலின்? எளிய மக்கள் மீது அரச வன்முறையை ஏவிக்கொன்றொழித்து, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? பேரவலம்! இம்மரணங்களுக்குத் தார்மீகப்பொறுப்பேற்று, காவல்துறையினர் மீது வழக்குத்தொடுத்து சிறைப்படுத்தாது, அவர்களைக் காப்பாற்ற நினைத்து மூடி மறைக்கும் திமுக அரசின் செயல் வெட்கக்கேடானது.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு, தம்பி விக்னேசின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், உயிரிழந்த தம்பி விக்னேசின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 731

0

0