வரலாற்றில் தோனியின் பெயர் பொறிக்கப்படும்…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 August 2020, 10:26 amசென்னை: வரலாற்றில் தோனியின் பெயர் பொறிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட் ரசிகர்களை 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமது திறமைகளால் கட்டி போட்டவர் தோனி. ஆல் டைம் சிறந்த வீரரான அவருக்கு கூல் கேப்டன் என்ற பெயரும் உண்டு.
கிரிக்கெட் ரசிகர்களின் ஆஸ்தான கதாநாயகான அவர் திடீரென நேற்று ஓய்வை அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரின் ஓய்வு கால வாழ்க்கை சிறப்பாக அமைய பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து கூறி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய, 3 சாம்பியன்ஷிப் பெற்று தந்த ஒரே ‘கூல் கேப்டன்’தோனி பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். அவரது புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையே என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி. வேலுமணி தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: இந்திய தேசத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் பல கிரிக்கெட் வீரர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்து, உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகனாக திகழ்ந்தவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், தமிழ் மண்ணை நேசித்து தமிழ் மக்களின் அபிமான வீரராகவும் திகழ்பவர் என்று கூறி உள்ளார்.