‘எம்.ஜி.ஆர். ஸ்டெயிலில் எடப்பாடியார்’…! வயலில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர்..!
28 August 2020, 4:42 pmதிருவாரூர் : திருவாரூரில் வயல் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு சென்று வருகிறார். அந்த வகையில், இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு சென்ற அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், ரூ.22.66 கோடி மதிப்பிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், திருவாரூரில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக சென்ற அவர், திருவாரூர் கோவில்வெண்ணி பகுதியில் வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, முகக்கவசங்களை விவசாயிகளுக்கு வழங்கிய அவர், எம்.ஜி.ஆர். பாணியில் நெற்பயிர்களை விவசாயிகளுக்கு தொட்டுக் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கொங்கு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தானொரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், டெல்டா பகுதி மக்களின் உணர்வுகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எப்போதும் ஒரு பிணைப்பு இருக்கும். அந்த பிணைப்பின் சான்றை இன்றைய காட்சிகள் அம்பலமாக்கியுள்ளன.
ஏற்கனவே, அரியர் தேர்வில் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பினால் இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது விவசாயிகளுடன் விவசாயியாக வலம் வருவது, அவருக்கு கூடுதல் மவுசை கூட்டியுள்ளது.