ரூ.137 கோடியினாலான வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி..!
17 September 2020, 12:42 pmசென்னை : ரூ. 137 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வண்டலூர் மற்றும் பல்லாவரம் மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே ரூ.55 கோடியில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 711 மீட்டர் நீளம், 23 மீ அகலம் கொண்ட இந்தப் பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மேம்பாலத்தை திறந்து வைத்த பிறகு அவர் பேசுகையில், “புதிதாக கட்டப்பட்டுள்ள வண்டலூர் மேம்பாலம் மூலம் கேளம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் கோயம்பேடு மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்,” என்றார்.
இதைத் தொடர்ந்து, ரூ. 82 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்லாவரம் மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், புதிய பாலத்தில் வாகன போக்குவரத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பாலம் ஜி.எஸ்.டி. சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை ஆகிய சந்திப்புகளை இணைத்துக் கட்டப்பட்டுள்ளது.