செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா..? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!!
24 November 2020, 5:17 pmசென்னை : நிவர் புயலினால் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிவர் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட வாரியாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதனிடையே, நிவர் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புயலின் நிலவரம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 4,133 இடங்களில் தனிகவனம் செலுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டோள்ளோம். நிவர் புயல் காரணமாக, தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை பொறுத்து விடுமுறையை நீட்டிக்கலாமா..? என்பதை அரசு முடிவு செய்யும்.
அத்தியாவசியப் பணிகள் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டும் பணிகளில் ஈடுபடுவார்கள். புயல் கரையை கடக்கும் போது, வீடுகளிலேயே மக்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம். மழை பெய்வதைப் பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறக்கப்படும். ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தவும், போதிய மணல் மூட்டைகளை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
0
0