உயிருக்குப் போராடியவரை தோளில் சுமந்த இன்ஸ்பெக்டருக்கு விருது : வீரதீர செயல் புரிந்தவர்களும் கவுரவிப்பு..!!

Author: Babu Lakshmanan
26 January 2022, 11:50 am
Quick Share

சென்னை : உயிருக்குப் போராடியவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய இன்ஸ்பெக்டருக்கு அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

73வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. மேலும், தமிழக வரலாற்றை பறைசாற்றும் விதமாக, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

2022ஆம் ஆண்டுக்கான வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் 8 பேருக்கு வழங்கப்பட்டது. உயிருக்கு போராடியவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கமும், திருவொற்றியூரில் கட்டட விபத்தின்போது அச்சமின்றி காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட தனியரசுக்கு விருதும் வழங்கப்பட்டது.

கோவை வனக்காவல்நடை உதவி மருத்துவர் அசோகன், மதுரை அருகே கார் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய கார் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது. அதேபோல, உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சக்தி, முசிறி எஸ்.ஐ. சிதம்பரம் உள்ளிட்டோருக்கு காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது.

Views: - 866

0

0