புயலில் இருந்து சென்னை முழுவதும் மீண்டாச்சு.. தேவைப்பட்டால் மத்திய அரசிடம் உதவி ; ஆய்வுக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!!

Author: Babu Lakshmanan
10 December 2022, 2:22 pm
Quick Share

சென்னை ; தமிழக முழுவதும் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கோரப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சென்னை காசிமேட்டில் மீன் பிடி துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட படகுகளை தமிழக முதல்வர் ஆய்வு மேற்கொண்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட வழங்கினார்.

இதனை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது:- அரசு திட்டமிட்டு பணியாற்றியதால் கடுமையான இந்த புயலில் இருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்காக பாடுபட்ட அமைச்சர்கள், மின்சார துறை, வருவாய் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்களுக்கு நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 5000 பணியாளர்கள் நிவாரண பணியில் ஈடுபட்டனர். தற்போது 25 ஆயிரம் பணியாளர்கள் நிவாரணம் பணியில் ஈடுபட்டுள்ளனர். 11.30 மணியிலிருந்து 1:30 மணிக்குள் புயல் கரையை 70 கிலோமீட்டர் வேகத்தில் கடந்துள்ளது.

தற்போது ராணிப்பேட்டை அருகில் புயல் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசின் திட்டமிடலால் பெரும் சேதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 4 உயிர்கள், 98 கால்நடைகள், 181 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 3179 குடும்பத்தில் உள்ள 9,130 பேர், 201 முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 16 குழுக்களாக 436 தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், பணியில் உள்ளனர்.

சென்னை மாநகரில் 180 மரங்கள் விழுந்துள்ளன. 900 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகரிலுள்ள 22 சுரங்க பாதையில் தண்ணீர் தேங்க வில்லை. இதனால், போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை. மின் கடத்திகள் சேதமானதால், 600 இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதில் 300 இணைப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளது.

முன்கூட்டியே திட்டமிட்டு பணியாற்றியதால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. முழு சேதம் அறிந்தபின் மத்திய அரசின் உதவி தேவைப்பட்டால் கேட்கப்படும். வேறு மாவட்டங்களுக்கு தேவைப்பட்டால் ஆய்வுக்கு செல்வேன், என முதல்வர் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் கேஎன் நேரு, பிகே சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேஜே எவினேசர், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 417

0

0