அமைச்சரவையில் மாற்றமா…? உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறாரா..? முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக சொன்ன பதில்..!!

Author: Babu Lakshmanan
9 June 2023, 4:48 pm
Quick Share

தற்போதைய மின்கட்டண உயர்வுக்கு காரணமே, கடந்த ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது :- வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறோம். வேளாண் துறைக்கு தனி கவனத்தை இந்த அரசு செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு அறிவித்த உடன், அதனை தமிழ்நாடு அரசு எதிர்த்தது. அதை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தெரிவித்தேன். அதனையடுத்து ஒன்றிய அரசு அதை ரத்து செய்தது.

டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக தி.மு.க அரசு செயல்படும். காவேரி பாசன பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வார கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.62.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 3889 கி.மீ தூர்வாரப்பட்டது.
4.90 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியும், 13.341 லட்சம் ஏக்கர் சம்பாசாகுபடியும், 39,73000 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை செய்தோம். அதை சாதனை என்பதை விட வேளாண் புரட்சி என கூறலாம்.

அதன் தொடர்ச்சியாக 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 80 கோடி ரூபாய் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடந்தது. மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதன் விளைவாக 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13.53 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் நடைபெற்றது. இதன் விளைவாக 41.45 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் புரட்சி தொடர்ச்சியாக நடந்தது. இந்தாண்டும் இதே போல திட்டமிடல் செய்யப்பட்டு ரூ.90 கோடி தூர்வார ஒதுக்கப்பட்டது. தற்போது 96 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள பணிகள் சில நாட்களில் முடிவடையும்.

ஜீன் 12 ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சென்ற ஆண்டுகளில் சாதித்து காட்டியதை போலவே மேட்டூர் அணை நீர் காவேரி டெல்டா பகுதிக்கு வருவதற்கு முன்பாகவே தூர்வாரும் பணிகள் நிறைவடையும். டெல்டா விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

தி.மு.க ஆட்சியில் வேளாண் உற்பத்தியும், பாசன பரப்பும் அதிகமாகி இருப்பது வேளாண் துறையில் புரட்சியை காட்டுகிறது. இந்த பணியை தொடர்ச்சியாக செய்து மண்ணையும் மக்களையும் காப்போம்.

கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசு மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த அரசுகளும் மேகதாதுவில் அணை கட்டுவோம் என தான் தொடர்ந்து கூறி வந்தார்கள். அப்போது இருந்தே நாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். தொடர்ந்து அதை எதிர்ப்போம். மேகதாது விவகாரத்தில் அணை கட்டக்கூடாது என்பதில் கலைஞர் எப்படி உறுதியாக இருந்தாரோ, அதே உறுதியோடு இந்த ஆட்சி இருக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

பயிர் காப்பீட்டை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுனர் கிடப்பில் போட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றத்தை நாடலாமா என சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து வருகிறோம், எனக் கூறினார்.

தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படுவாரா என்கிற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது ;- நாங்கள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இந்த பிரச்சனைகளே இல்லை. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயர் வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு அவர் பெயர் வைக்கலாமா அல்லது புதிய பல்கலைக்கழகம் உருவாக்கி அதற்கு வைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததற்கு ஆளுநர் தான் காரணம். இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கவே பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சர் இருக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம், எனக் கூறினார்.

இதனிடையே, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறதா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வரப்போகிறது என கூறிக்கொண்டுள்ளார்கள், எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பரப்பப்படுகிறது. வீட்டு இணைப்புக்கு எந்த வித கட்டன உயர்வும் கிடையாது. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். ஒன்றிய அரசின் மின் கட்டண விதிப்படி 4.7 விழுக்காடு கட்டணத்தை உயரத்த வேண்டும் ஆனால் 2.18 விழுக்காடாக அதை தமிழ்நாடு அரசு குறைத்து அந்த தொகையையும் மானியமாக தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்வு இருக்கும்.

அ.தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம் செங்குத்தாக உயர்த்தினார்கள். மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்து விட்டார்கள். அ.தி.மு.க ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான் இந்த பிரச்சனை. ஆவினில் சிறுவர்களை வேலைக்கு பயன்படுத்துவதாக கூறும் குற்றச்சாட்டு தவறான குற்றச்சாட்டு. அது குறித்து தயாரிக்கப்பட்ட ஆதாரம் பொய்யானவை. பொய்யாக தயாரிக்கப்பட்டு அது பரப்பப்படுகிறது.

23ஆம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை அழைத்து ஒரு கூட்டம் கூட்டியுள்ளார். அதில் பாஜகவை வீழ்த்துவதற்கான யூகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும். அந்த கூட்டத்தில் நிச்சயம் நான் கலந்து கொள்வேன்.

மருத்துவ கல்லூரியில் கேமரா இல்லை என மூன்று மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தார்கள். உரிய அதிகாரிகளிடம் அதை சந்தித்து விளக்கம் அளித்த பின்பு தற்பொழுது மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

பேட்டின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

Views: - 458

0

0