அசுரன் பட வசனத்தை சொல்லிய முதலமைச்சர் ஸ்டாலின்… புன்னகைத்துப் போன ஆளுநர் ஆர்.என்.ரவி : பட்டமளிப்பு விழாவில் சுவாரஸ்யம்!!

Author: Babu Lakshmanan
16 May 2022, 1:36 pm
Quick Share

சென்னை: சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். முன்னதாக, விழாவிற்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர், முதலமைச்சரை ஆளுநர் கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார்.

இதைத் தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது :- சென்னையின் முதல் பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தின் பயின்ற பல முன்னோடிகள், சாதனையாளர்கள் படித்துள்ளார். அவர்களை போல நீங்களும் முன்னோடியாக வேண்டும்.

உங்களை போன்றவர்களும், ஏழைகளும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வசதியாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. பெண்கள் இடைநிற்றலை தவிர்க்கவே மாதம் ரூ.1000 கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, இலவச பஸ்பாஸ், இலவச தாங்கும் விடுதி போன்ற திட்டங்களை பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் நாங்கள் வழங்கி வருகிறோம்.

சென்னை பல்கலையில் திராவிட இயக்க ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விதை போடப்பட்டது. ஆய்வு கட்டுரைகளின் விவரங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன். திருக்குறள் இங்கு விருப்ப பாடமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். மாணவர்களை நல்வழிப்படுத்த பயன்படும், எனக் கூறினார்.

இறுதியில், ‘கல்விதான் உங்களுடைய சொத்து. அதை யாரும் உங்களிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது என்று அசுரன் படத்தில் வரும் வசனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். கல்வியை வளப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் ஆளுநர் ரவிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், எனக் கூறினார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த ஆளுநர் ஆர்.என். ரவி புன்னகையுடன் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டார்.

Views: - 703

0

0