மாணவியை பலாத்காரம் செய்து கொலை … தற்கொலை போல செட்டப் செய்த கல்லூரி முதல்வர் : விசாரணையில் சிக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
10 February 2023, 5:15 pm
Quick Share

மாணவியை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கி கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கல்லூரி வார்டனை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, லிங்கசுகுர் நகரில் உள்ள சார் எம்.விஸ்வேஸ்வரய்யா ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 3ம் தேதி இரவு விடுதியில் தனது அறையில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவிகள் மற்றும் பெற்றோர் கல்லூரிக்குள்ளேயே போராட்டம் நடத்தினர். அதேவேளையில், மாணவியின் சடலத்திற்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனால், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். சக மாணவிகள், குடும்பத்தினர் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர். இதனிடையே, அந்தக் கல்லூரியின் முதல்வரும், அந்த விடுதியின் வார்டனுமான ரமேஷ் தலைமறைவானார்.

செல்போன் சிக்னலை வைத்து பிஜாப்பூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த ரமேஷைக் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த மாணவியை ரமேஷ் தனது அறைக்கு அழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதனை வைத்து மிரட்டி மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.

இதனிடையே, மாணவி வேறு கல்லூரிக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததால், தான் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து அவரைக் கொலை செய்துள்ளார். கொலையை தற்கொலையாக மாற்றுவதற்காக, மாணவியை அவரது அறையில் தூக்கில் தொங்குவது போல செட்டப் செய்துள்ளார்.

இதையடுத்து, ரமேஷைக் கைதுசெய்த போலீஸார், மாணவிகள் யாராவது இதேபோல் ரமேஷால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கின்றனரா எனக் கண்டறிய, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 274

1

0