நீட் மசோதா ஆளுநர் ஆர்.என். ரவியிடம் இருக்கிறதா…? காங்கிரஸ் கருத்தால் வெடித்த சர்ச்சை…!

Author: Babu Lakshmanan
19 January 2023, 4:52 pm
Quick Share

ஆளுநர்

கடந்த 4-ம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, தமிழ்நாட்டை தமிழகம் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், கொந்தளித்து ஆளுநருக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தன.

TN Governor RN Ravi -Updatenews360

இந்த கொதிப்பே அடங்காத நிலையில்தான் கடந்த 9-ம் தேதி, சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய ஆளுநர் ரவி, அதில் திமுக அரசு அச்சிட்டு கொடுத்த பல பகுதிகளைப் படிக்காமல் தவிர்த்து விட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது. அப்போது ஆளுநருக்கு எதிராக உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு தீர்மானம் கொண்டுவர அது சபையில் நிறைவேற்றவும் பட்டது.

இதனால் கூட்டம் முடியும் முன்பே, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறி விட்டார். இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, ஆ ராசா உள்ளிட்டோர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்தனர். அதில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்
அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள், ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திலும் குதித்தனர்.

விளக்கம்

தமிழ்நாடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஆளுநர் ரவி இப்போது அதற்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார். இதுதொடர்பாக கிண்டி ஆளுநர் மாளிகை அலுவலகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

அதில்,”அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். அதை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் எதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என்று ஆளுநர் ரவி கூறியிருக்கிறார்.

அத்துடன் ‘தமிழ்நாடு’ பிரச்சினைக்கு மத்தியில், அந்த வார்த்தையை தவிர்த்து வந்த ஆளுநர், தமிழ்நாடு என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார். அவரது இந்த விளக்க செய்திக்குறிப்பின் தொடக்கத்தில், ‘ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தவிர தமிழ்நாடு ஆளுநர் என்றே அவரது பெயருக்கு முன்னால் போடப்பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் ரவி இப்படி விளக்கம் அளித்த பிறகும் கூட திமுகவின் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை.

அதிருப்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்துகளை தான் ஏதோ இயல்பாக சொல்வது போன்று ஆளுநர் தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருந்தார். தற்போது கடுமையான எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக இப்படி விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதுவும் தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு மட்டுமே ஆர்.என்.ரவி பதிலளித்திருக்கிறார். சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரை குறித்து அவர் வாய் திறக்கவில்லை” என்று அதிருப்தி தெரிவித்தார்.

காங்., வரவேற்பு

ஆனாலும் தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆளுநரின் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு வரவேற்பும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சைக்கு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மிகவும் சிறப்பு. வரவேற்கத்தக்க விஷயம். இதேபோல, தமிழ்நாட்டின் நலன் கருதி சட்டப் பேரவையின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும் காலம் கடத்தாமல் உடனே ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும். தமிழ்நாட்டின் மக்களின் உயிரோடு விளையாடும் ஆன் லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களும் அதில் அடங்கும். 

இவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீது அக்கறையுள்ள, அவர்களின் நலனுக்கு முன்நிற்கும் ஆளுநர் என்ற பெரும் பெயர் பெறுவார். மக்களும் ஆளுநரை வாழ்த்துவார்கள். நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? காத்திருக்கிறோம்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏன் நெருக்கடி

இதில் நீட் தேர்வு, ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாக்கள் குறித்து செல்வப் பெருந்தகை தெரிவித்த கருத்துகள்தான் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரை சமூக நல ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கழுவிக் கழுவி ஊற்றும் நிலைக்கும் தள்ளி விட்டுள்ளது.

உண்மையிலேயே அவர் அன்றாட தமிழக அரசியல் நிலவரம் குறித்து அறிந்து வைத்திருக்கிறாரா?… இல்லையென்றால் மனம் போன போக்கில் அள்ளி விடுகிறாரா?… என்ற கேள்விகளும் இதில் எழுகின்றன.

ஏனென்றால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக அரசு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைக்க, அந்த மசோதாவை, ஆளுநர் ரவி உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தும் விட்டார். அந்த சட்ட மசோதா மீது இதுவரை குடியரசுத் தலைவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

இதை ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் வாசித்த தனது உரையிலேயே தெளிவாக குறிப்பிட்டும் இருந்தார். அப்படி இருந்தும் செல்வப் பெருந்தகை இந்த மசோதாவுக்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஏன் கூறுகிறார் எனத் தெரியவில்லை.

அதேபோல ஆன் லைன் ரம்மி தொடர்பான அவசர சட்ட மசோதா, மத்திய அரசின் வரம்புக்குள் வருவது ஆகும். எனவே ஒரு மாநில அரசு மத்திய அரசின், அதிகாரத்தில் தலையிடும் முயற்சியாகவே இது கருதப்படும். இதை ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கு மறைமுகமாக தெரிவித்து விட்டதாக கூறப்படும் நிலையிலும் செல்வப் பெருந்தகை போன்றவர்கள் ஆளுநருக்கு ஏன் நெருக்கடி கொடுக்கிறார் என்பது தெரியவில்லை?…

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் ஒரு கட்டத்தில் அது மக்கள் மனதில் உண்மையாக பதிந்து விடும் என்பது அரசியல்வாதிகளின் பிரச்சார கணக்கு. அதன் அடிப்படையில் செல்வப் பெருந்தகை இப்படி கூறினாரா என்பதும் புரியவில்லை?…என்று

Views: - 310

0

0