தருமபுர ஆதினத்தை தோளில் சுமப்பேன்.. இதன் மகிமை கோபாலபுரத்துக்கு தெரியுமா..?திமுகவை தாக்கிய அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
4 May 2022, 2:46 pm
Quick Share

தருமபுர ஆதினத்தை தோளில் சுமக்க வருவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தமிழக அரசியலில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை – தருமபுர ஆதினம் மடத்தில் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பட்டண பிரேவேச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Dharmapuram Adheenam -Updatenews360

இதனிடையே, தடை விதிக்கப்பட்டது குறித்து பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 500 ஆண்டுகளாக நடக்கும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பது வருத்தமளிப்பதாகவும், உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவதாகவும் கூறினார். மேலும், மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை, இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்வதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, 4 நாட்களுக்குப் பிறகு இன்று கூடிய சட்டப்பேரவையில், தருமபுர ஆதின விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

EPS - Updatenews360

அப்போது, அவர் பேசியதாவது :- தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்குவது பாரம்பரியமாக நடந்து வரும் நிகழ்வு. ஆதினத்தில் வசிக்கும் 72 பேர் விருப்பப்படிதான் தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வதில் மரியாதை குறைவு ஏதும் கிடையாது. பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுர ஆதினத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கான தடையை நீக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் சேகர் பாபு பதிலளித்து பேசியதாவது :- பட்டணப் பிரவேசம் குறித்து ஆதினங்களுடன் 3 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு 22ம் தேதி நடைபெறும் என்பதால், அதற்குள் சுமூக தீர்வு எட்டப்படும். தருமபுர ஆதினத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி, நல்ல முடிவை அறிவிப்பார். சிலர் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வை அரசியலாக்க வேண்டாம், எனக் கூறினார்.

Annamalai Letter Stalin - Updatenews360

இந்த நிலையில், தருமபுர ஆதினத்தை தோளில் சுமக்க வருவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டத் தயாராக இருக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 760

0

0