பெரியார் மேடையில் இளையராஜாவை சாதி சொல்லி திட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்… கைதட்டி வரவேற்ற கி.வீரமணி… இது என்ன மனநிலை…. இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் (வீடியோ)

Author: Babu Lakshmanan
23 April 2022, 11:30 pm
Quick Share

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும், அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள், என பிரதமர் மோடியை அவர் புகழ்ந்து எழுதியிருந்தார். அவரது இந்தக் கருத்திற்கு திராவிட அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அதேவேளையில், இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் “நீட்” தேர்வு மற்றும் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான பிரச்சாரப் பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ஈரோட்டில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, தபேலா அடிப்பவனெல்லாம் இசைஞானி ஆகமுடியாது என்றும், காசு வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது என்று அவர் கடுமையாக பேசினார். இதனை மேடையில் அமர்ந்திருந்த கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கைதட்டி வரவேற்றனர். இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாரின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் திராவிட இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, சாதி குறித்த பேச்சை கைதட்டி வரவேற்கலாமா..? என்றும், இதுதான் உங்களின் சமூக நீதியா..? என்ற கேள்வி தற்போது எழத் தொடங்கியுள்ளது. அதோடு, பெரியாரின் பேரனாகிய ஈவிகேஎஸ் இளங்கோவனும், தன்னை அடுத்த பெரியார் என்று சொல்லிக் கொள்ளும் கி.வீரமணி, இளையராஜாவை சாதியை வைத்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இளையராஜாவை சாதியை சொல்லித் திட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், அதனை கைதட்டி வரவேற்ற கி.வீரமணிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :-‘பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே’ என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது, என் கூறினார்.

இதனிடையே, இளையராஜாவை சாதியை சொல்லித் திட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், அதனை கைதட்டி வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 902

0

0