இதுதான் கடைசி வார்னிங்… இதுக்கு மேல நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்… அமைச்சர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போட்ட CM ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 8:38 pm
Quick Share

அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும் ஏதேனும் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வார்னிங் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக கட்சி நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- நம்மிடம் வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். நம் தரப்பில் இருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது.

அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி – ஒட்டி, திரித்து மோசடி செய்து, வெற்றுப் புழுதியைக் கிளப்பி, அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க நினைக்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள்.

அவர்களின் கனவில் புழுதிமண் விழும். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பியது நமது ஆட்சி. அதனால் மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 406

0

0