எங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு அமைச்சர் தான் பொறுப்பு : வயிற்றில் கருவுடன் சேகர்பாபு மகள் கண்ணீர் மல்க வேண்டுகோள்!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2022, 7:27 pm
Minsiter Daughter - Updatenews360
Quick Share

தந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மகள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியலில் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. இவரது மகள் ஜெயகல்யாணி. இவர் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற வாலிபரை காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

மேலும் தனது விருப்பத்தின் பேரில் தான் திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் ஜெயகல்யாணி சதீஷ் இருவரும் பெங்களூர் போலீஸ் மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சரை சந்தித்தனர்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஜெயகல்யாணி தனது உயிருக்கு தனது தந்தையால் ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் தான் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வீடியோ பதிவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் பேசும் ஜெயகல்யாணி, தான் தமிழகத்தின் அமைச்சர் சேகர் பாபுவின் மகள் என்று அறிமுகம் செய்துகொள்கிறார்.

அதன்பிறகு, நானும் எனது வீட்டின் அருகில் இருக்கும் சதீஷ்குமார் என்பரும் கடந்த 7 வருடங்களாக காதலித்தோம். 2021-ம் ஆண்டு எங்கள் காதல் விவகாரம் எங்கள் வீட்டுக்கு தெரிந்தது. அப்போது என்னை அமெரிக்கா அனுப்பிவிட்டார்கள்.

2021- ஏப்ரல் மாதம் நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தேன். அதன்பிறகு சதீஷ்குமாருடன் பழக தொடங்கினேன். அதே வரும் ஆகஸ்ட் மாதம் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறினோம். என் முழு விருப்பத்துடன் தான் வெளியே வந்தேன் அதன்பிறகு எங்களை புனேயில் காவல்துறையினர் பிடித்து தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனது.

சென்னை வந்த பிறகு எனது கணவரை 2 மாதங்களாக அதிகாரமில்லாமல் போலீஸ் கஸ்டியில் வைத்திருந்தனர். அதன்பிறகு எனது கணவரின் தந்தை ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்து அவரை வெளியில் கொண்டு வந்தார்.

அதன்பிறகு எனது அப்பாதான் இதற்கொல்லாம் காரணம் என்பது அவரின் செல்போனை பார்த்து தெரிந்துகொண்டேன்.

அதன்பிறகு எனது கணவரின் முன்னாள் காதலியை அழைத்து வந்து எனது கணவர் பெயரில் புகார் கொடுக்க வைத்துள்ளனர். அந்த பெண் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது. இதெல்லாம் எனக்கு தெரியவந்த பிறகு எனது கணவரிடம் பேசி 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு பதிவுத் திருமணம் ஆனதற்கான ஆவணங்கள் உள்ளது.

இப்போது எங்கள் திருமணம் முடிந்து 10 மாதங்கள் ஆகிவிட்டது. நாள் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனது கணவர் மீது நிறைய பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

எனது கணவர் என்னுடன் வந்த பிறகும் அவர் கொள்ளையடித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது அப்பாவுடன் இருக்கும் நபர்தான் இந்த புகாரை கொடுத்துள்ளார்.

இந்த 10 மாதங்களில் எனது கணவரின் ஹேண்டிகேப்ட் அப்பா உட்பட குடும்பத்தினர் அனைவரையும் டார்ச்சர் செய்திருக்கிறார்கள். மேலும் தமிழக காவல்துறை எனது தந்தைக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

எங்களது காதல் விவகாரம் தெரிந்து எனது கணவர் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இது அனைத்திற்கும் எங்களிடம் ஆதாரம் உள்ளது.

இந்த அனைத்து வழங்குகளையும் நாங்கள் நேரடியாக தமிழகத்திற்கு வந்து சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால் நாங்கள் சென்னை வந்தால் தமிழக போலீஸ் எனது கணவரை எதாவது செய்துவிடுவார்கள் என்ற பயத்தினால்தான் நாங்கள் எதற்கும் வராமல் இருக்கிறோம்.

தமிழகத்தில் இப்போது நிறைய லாக்கப் டெத் நடக்கிறது. அந்த மாதிரி என் கணவரை ஏதாவது செய்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது.

இதுவரைக்கும் எங்களுக்கு உதவி செய்த அனைவரின் வீட்டுக்கும் போலீஸ் போகிறார்கள். எல்லாரும் எங்களை தேடும் அளவுக்கு நாங்கள் அவ்வளவு பெரிய தவறு எதுவும் செய்யவில்லை நான் இப்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.

பின்னாளில் எனக்கோ எனது கணவருக்கோ என் குழந்தைக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு முழு காரணம் எனது அப்பா அமைச்சர் சேகர் பாபுதான்.

தமிழகத்தை பொருத்தவரை சேகர்பாபு முதல்வருடன் நெருக்கமாக இருப்பதால், எல்லா போலீசும் அவருக்கு உதவுகிறார்கள். நாங்களும், முதல்வர், கவர்னர், ஜனாதிபதி என அனைவருக்கும் புகார் அளித்துவிட்டோம்.

ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. முதல்வர் எல்லாம் தெரிந்து அமைதியாக இருக்கிறாரா அல்லது அவருக்கு ஒன்றும் தெரியாதா என்பது தெரியவில்லை.

நாங்களும் ரொம்ப கஷ்டத்தில் தான் இருக்கிறோம். கர்ப்பமாக இருக்கும்போது இவ்வளவு பிரச்சினையையும் சந்தித்து வருகிறோம்.
நாங்கள் சட்டப்பூர்வமாக அனைத்து வழக்குகளையும் சந்திக்க தயார். இந்த விவாகரத்தில் யாரிடம் உதவி கேட்டாலும் செய்ய மறுக்கிறார்கள். இதில் முதல்வர் தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

Views: - 333

0

0