திமுக அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகம்… மக்கள் வரி பணத்தில் ஓசியில் தான் கார், வீடு என அனுபவிக்கின்றனர் : செல்லூர் ராஜூ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 8:35 am
Sellur raju - Updatenews360
Quick Share

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீபாவளியை முன்னிட்டு முக்கிய பொருட்கள் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் ஆம்னி பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். தமிழக அரசு சிறப்பு பஸ்கள் அதிகம் இயக்க வேண்டும்.

தி.மு.க., அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகரித்து விட்டது. அவர்களும் மக்கள் வரிப்பணத்தில் தான் கார், வீடு, ஓசி பணியாட்கள் என அனைத்தும் ‘ஓசி’யாக அனுபவிக்கின்றனர். பெண்களை பார்த்து ‘ஓசி பயணம்’ என ஒரு அமைச்சர் வாய்க்கொழுப்பாக பேசுகிறார். இதை தவிர்க்கவே இலவசம் என கூறாமல் ‘விலையில்லா’ என மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அ.தி.மு.க., ஆட்சியில் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., ‘யானை பாகன்’ போல் இருந்தார். இந்த ஆட்சியில் குதிரை ஓட்டியாக பயன்படுத்துகின்றனர். திறமையுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தி.மு.க., அரசு நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும். ரேஷனில் தற்போது அரிசி கடத்தல் அதிகரிக்கிறது. அத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கைகள் கட்டப்பட்டுள்ளது.

‘போதை பொருள் விற்பனை, கடத்தல் அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை சர்வாதிகாரியாக மாறவில்லை. மதுரையில் மாநகராட்சி மேயர் இந்திராணி, அமைச்சர் தியாகராஜன் சொல்வதை மட்டுமே கேட்கிறார். அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பாதாளச் சாக்கடை திட்டம் உட்பட எந்த பணிகளும் சரியாக நடக்கவில்லை, என்றார்.

Views: - 421

0

0