தமிழர்களை சுரண்டி பார்த்தால் தாங்க மாட்டீங்க… அதுக்கு இதுதான் சாட்சி ; ஆளுநரை மறைமுகமாக சீண்டிய திமுக எம்.பி. கனிமொழி..!!

Author: Babu Lakshmanan
19 January 2023, 9:27 am
Quick Share

சே குவேரா இருந்திருந்தால் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவத்தை கண்டித்து இருப்பார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி எஸ்டெஃபானி குவேராவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு இணைந்து வரவேற்பு நிகழ்ச்சியை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

87 வயதான உமையாள்புரம் சிவராமன் சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து மிருதங்கம் வாசித்து வரவேற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க சேகுவேராவின் மகள் ஆவளோடு அதை கண்டு களித்தார்.

பின்னர் பேசிய திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:- உலகளாவிய மனிதப்பார்வை, சேகுவேராவிற்கும், பெரியாருக்கும் இருந்தது. எனக்கும். உங்களுக்கும் (கம்யூனிஸ்ட்) உள்ள உறவு புதுப்பிக்கும் உறவல்ல எப்பொழுதும் தொடர்கின்ற உறவு.

நீங்கள் (அலெய்டா குவேரா) கியூபாவின் மகள் மட்டுமல்ல இந்த நாட்டின் மகள், நீங்கள் தமிழ்நாட்டின் மகள், என்று கூறினார்.

திமுக எம்பி கனிமொழி பேசியதாவது:- எத்தனையோ ஆண்டுகளாக புத்தகங்களில், சுவரொட்டிகளில் புரட்சி என்ற சொல்லை நினைக்கும் போதெல்லாம், கண் முன்னால் வந்து நிற்கும் அந்த முகத்தின் சாயலை (அலெய்டா குவேரா)வின் வாயிலாக இந்த மேடையில் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கலைஞரிடம் உயிரோடு இருக்கும் உலக தலைவர்களில் நீங்கள் சந்திக்க விரும்பும் தலைவர்கள் யார் என்று ஒருமுறை கேட்டபோது முதலில் சொன்ன பெயர் பிடல் காஸ்ட்ரோ அடுத்துச் சொன்ன பெயர் சேகுவேரா. அப்படிப்பட்ட சேகுவேராவின் மகளோடு இந்த மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது

புரட்சிக்கான அடித்தளம் நம்பிக்கை அந்த நம்பிக்கைக்கான சின்னமாக இருப்பது கியூபாவும் சேகுவேராவும் தான். இன்றைய இளைஞர்கள் கூட தன்னுடைய சட்டைகளில் அந்த முகத்தை வைத்துக் கொண்டு தான் இந்த உலகத்தை தன்னால் மாற்றிவிட முடியும் என்று நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள்.

கியூபாவிற்காக நிச்சயம் நாம் தொடர்ந்து நிற்போம், அந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். நான் சொல்லாத ஒன்றை சொல்லி விட்டீர்கள் என்று இங்கு உருவான புரட்சி கணல் தான் அவர்களை சொல்ல வைத்திருக்கிறது.(ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கம் குறித்து பேச்சு).

சாதாரணமாக சீண்டிப்பார்த்தல் தமிழர்கள் அமைதியாக தான் இருப்பார்கள். அவர்களை மேலும் சுரண்டி பார்த்தால் தான் உள்ளே ஒரு தீ கங்கு அணையாமல் இருப்பதை பார்க்க முடியும். அப்படி இருக்கையில் யாராக இருந்தாலும், நான் அப்படி சொல்லவே இல்லையே என்று சொல்லித்தான் ஆக வேண்டும் , அப்படி ஒரு நிலையை நாம் உருவாக்கி காட்டி இருக்கிறோம், என தெரிவித்தார்.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “புரட்சிக்கான நம்பிக்கையாக அவர்களுகான (கியூபா மக்கள்) நம்பிக்கையாக நாம் அத்தனை பேரும் இருப்போம். சே குவேரா இருதிருந்தால் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவத்தை கண்டித்து இருப்பார். ஆர்எஸ்எஸ் போன்ற சங்பரிவார் கும்பல்களை எதிர்த்துப் போராடும் சக்திகளுக்கு துணையாக நின்றிருப்பார்,” என்று கூறினார்

தொடர்ந்து சு. வெங்கடேசன் மேடையில் பேசியதாவது :- தனது தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் பெற முடியாத மகள் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். காரல் மார்க்ஸ் ,லெனின் , பிடல் காஸ்ட்ரோ போன்ற தந்தையின் அன்பும்,அரவணைப்பும் எங்களுக்கும் கிடைக்கவில்லை.ஆனால் அவர்களின் அறிவால், உணர்வால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அரங்கம் முழுவதும் இருக்கிறார்கள்

உலகம் முழுவதும் வலதுசாரி சிந்தனைகள் எழுச்சி பெற்று வரும் இந்த நிலையில் கூட தென்னமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளின் ஆட்சி அமைந்து வருகிறது. நீண்ட நெடுங்காலமாக ஏகாதிபத்தியத்தால் பல இன்னல்களுக்கு ஆளாகும் கியூப மக்களுக்காக இங்கு கூடியிருக்கும் தோழர்கள் என்றும் துணை நிற்போம், என்று தெரிவித்தார்

நிகழ்ச்சியில் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா பேசியதாவது :- ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக இந்தியாவிற்கு வந்தேன். இங்கு எனக்கு அளிக்கப்பட்ட அன்பை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றேன் அனைத்து இடத்திலும் ஒரே மாதிரியான அன்பை கண்டேன். நான் யாருடைய மகள் என்பது முக்கியமல்ல. நான் யாராக இருக்கிறேன் என்பது தான் முக்கியம்.

அடித்தட்டு மக்களிடம் இணைந்திருக்க வேண்டும் என்று என் அம்மா சிறுவயதிலேயே எனக்கு கற்றுக் கொடுத்தார். சேகுவேராவின் மகள் என்பதனாலே அதிக அன்பை பெறுகிறேன்.

சேகுவேராவின் மகளாக இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். அதேபோல என் தாய்க்கு மகளாக பிறந்ததை நினைத்தும் பெருமை கொள்கிறேன். பூமி பந்தின் மேல் காலூன்றி நிலத்தில் உறுதியாக நிற்க வேண்டும் என்று என் தாய் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இன்று நான் உருவாவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அவர்தான். என் பேத்தி மிகவும் சிறுவயதாக இருந்தபோது இந்தியா வந்தோம். அவள் சிறு வயதாக இருந்தபோது ஹவானாவில் ஒரே ஒரு குட்டி யானை மட்டும் தான் இருந்தது அதுவும் இறந்துவிட்டது. அப்பொழுது இந்தியாவில் நிறைய யானைகள் இருப்பதை அறிந்து கொண்டு அதன் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டால். தற்பொழுது கேரளாவில் மாநிலத்தின் மிகப்பெரிய யானையை பார்த்தோம். அதன் மீது ஏறி சவாரி செய்த அந்த 15 நிமிடங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக நானும் இருக்கிறேன். எனக்கு போர்த்திய சால்வைகளை அனைத்தையும் கியூபாவுக்கு எடுத்துச் சென்று அவர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதன் மூலம், இந்த நாட்டின் மக்கள் என் மீது எவ்வளவு அன்பை பொழிந்தார்கள் என்பதை அவர்களும் அறிந்து கொள்வார்கள்.

காலம் கடந்து இருக்கலாம். ஆனால் நம் லட்சியம் மன உறுதியும் அப்படியேதான் இருக்கிறது.
நாம் அனைவரும் ஒரு இலக்கை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதை நோக்கி நகர வேண்டும்.
உங்கள் மாநிலத்தின் பெயர் என்னவென்று (தமிழ்நாடு) சொல்லச் சொல்லி பார்வையாளர்களை கேட்டுக் கொண்ட சேகுவேராவின் மகள்.

இதோ நீங்கள் கூறிய அந்தப் பெயர்தான் இன்று உங்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்த இலக்கு. அதை நோக்கி தான் உங்கள் பயணம் இருக்க வேண்டும்.கியூபாவின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் பல வழிகளில் தாக்குதல் நடத்துகிறது. இது கியூபாவில் வாழும் மக்களை மிகவும் பாதிக்கிறது.

இப்பொழுது கியூபாவின் பொருளாதாரம் சிக்கலில் தான் இருக்கிறது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக பெரும் இழப்புகளை கியூபா சந்தித்திருக்கிறது. கியூபாவிற்கு வரும் கப்பல்களை வரவிடாமல் அமெரிக்கா தடுக்கிறது. கியூப மக்களிடம் இருந்து அமெரிக்காவில் எதை வேண்டுமானாலும் பறித்து விட முடியும். ஆனால் எங்களின் மன உறுதி ஒருபோதும் பறிக்க முடியாது, என்று கூறினார்.

Views: - 253

0

0