2 பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம்… சரியான நேரம் வரட்டும் : திமுக எம்பி செந்தில்குமார் எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
9 May 2022, 2:32 pm
Quick Share

திமுகவில் தனக்கும், தனது தந்தைக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று திமுக எம்பியும், மாநிலங்களவை திமுக குழு தலைவருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கூறி வந்தார். மேலும், திமுக மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால், கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், நேற்று தி.மு.க.,வின் திருச்சி சிவா எம்.பி., மகன் சூர்யா தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சென்னை, தி. நகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. வில் இணைந்தார். மேலும், தான் கனிமொழியின் ஆதரவாளர் என்று கூறுவதாகவும், எனவே, எந்தக் காலத்திலும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், பல்வேறு திமுக சீனியர் தலைவர்கள் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவில் திருச்சி சிவாவின் மகன் இணைந்தது தொடர்பாக தருமபுரி திமுக எம்பி செந்தில் குமார், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல்.

உங்க கட்சியின் இரண்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு மொத்தம் 4 எம்எல்ஏக்களே உள்ள நிலையில், அவர்களில் 2 பேர் திமுகவுக்கு தாவ தயாராக இருப்பதாக எம்பி கூறிய இந்தக் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கமெண்ட்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Views: - 776

0

0