இரட்டை இலைக்கு தடை எல்லாம் கிடையாது.. ஆனா, ஒரு கண்டிசன்.. உச்சநீதிமன்றத்தால் குழப்பத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 6:38 pm
Quick Share

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு போட்டியாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Admk - Updatenews360

ஏற்கனவே பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, 3 நாட்களுக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது :- இரட்டை இலை சின்னம் அளிக்க கோரி தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி தரப்போ, ஓ.பன்னீர்செல்வம் தரப்போ அணுகவில்லை. கையெழுத்திட அதிகாரம் உள்ளவர் என தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டவர் கையெழுத்துள்ள வேட்பு மனுவைவே ஏற்க முடியும். ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் பணி கிடையாது.

வாக்காளர் பட்டியலை தயார் செய்வதும், தேர்தல் பணிகளை கண்காணிப்பதும் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி. ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவது இல்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார். உச்சநீதிமன்ற்த்தில் நிலுவையில் உள்ள பொதுக்குழு விவகாரம் தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களும், குறிப்பாக ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், எதிர்வழக்குகளும் நிலுவையில் இருப்பதால், ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆவணங்களாக ஏற்று தேர்தல் ஆணையம் பதிவேற்றவில்லை.

தற்போதைய சூழலில், இடையீ்ட்டு மனு தொடர்பாக விரிவான பதில் மனுவை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை. விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும், தேவைப்படும் பட்சத்தில் விசாரணையின்போது விரிவான வாதங்களை முன் வைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளிக்க கோருகிறோம்., என தெரிவிக்கப்பட்டது.

Supreme court - Updatenews360

இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பளிக்க எங்களை நிர்ப்பந்திக்கிறீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் முடக்கபட்டு உள்ளதா என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, இரட்டை இலை முடக்கபடவில்லை என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி போட்டியிடலாம் என நீதிபதிகள் கூறினர்.

அதேவேளையில், தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க மறுப்பதாகவும், ஜூலை 11 ந்தேதி பொதுக்குழு தீர்மானத்திற்கு எந்த நீதிமன்றமும் தடைவிதிக்காததால் அது செல்லும் என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பில் வாதிடுகையில், ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட தயார இருக்கிறேன். ஆனால் எனது கையெழுத்தை எடப்பாடி ஏற்க மறுக்கிறார். ஒருங்கிணைப்பாளர் என்ற தரப்பில் நான் வேட்பாளரை அரிவித்து உள்ளேன் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஓபிஎஸ் யோசனை தொடர்பாக உங்களது பதில் என்ன…? இருவரும் இணைந்து தீர்வு காணும் போது என்ன பிரச்சினை இருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்து எடுக்க பொதுக்குழுவை கூட்டவேண்டும் என்றும், பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொதுக்குழு முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்றும், கட்சியில் இருந்து நீக்கபட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்றம், இந்த இடைக்கால உத்தரவு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என கூறியது.

Views: - 303

0

0