டெல்லி மதுபானக் கொள்கை ஊழலை மிஞ்சிய டாஸ்மாக் ஊழல்.. ஒருத்தரையும் விடக் கூடாது : மத்திய அரசுக்கு வலியுறுத்திய இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
27 May 2023, 4:26 pm
Quick Share

சென்னை : சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் அமைச்சரின் சகோதரர் இல்லத்தில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளை சிறைபிடித்து திமுகவினர், அவர்களையும் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திமுகவினர் நடத்திய தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணமாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஆளும் கட்சியினர் முன் கைகட்டி நின்று சேவகம் செய்யும் ஒரு சில தமிழக காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிப்பதாகக் கூறிய அவர், டெல்லி அரசில் நடந்த மதுபானக் கொள்கை ஊழலைவிட பலநூறு மடங்கு ஊழல் தமிழகத்தில் இந்த விடியா திமுக ஆட்சியில் நடந்துள்ளதாகவும், சோதனையோடு நின்றுவிடாமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Views: - 268

0

0