மக்கள் பணியை மறந்துவிட்டு… முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கத் துடிக்கும் விடியா அரசு… இபிஎஸ் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
8 July 2022, 10:31 am
Quick Share

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுகளில் மட்டும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கீ.வீரமணி, கே.சி. கருப்பணன், ராஜேந்திர பாலாஜி என பல அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு விட்டது.

இது திமுகவின் பழிவாங்கும் செயல் என்று அதிமுக தலைமை ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 804

0

0