ஸ்டாலினை போல எடுத்ததும் தலைவரானவன் நான் அல்ல… அரசியல்வாதிகளுக்கு சில தகுதிகள் உண்டு : இபிஎஸ் அதிரடி பேச்சு

Author: Babu Lakshmanan
9 February 2022, 6:40 pm
Quick Share

திருவள்ளூர் : முதலமைச்சர் ஸ்டாலினை போல எடுத்ததும் தலைவன் ஆனவன் நான் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவள்ளூரில் உள்ள ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியானது.

ஒரு மணிநேரம் கூட வீணடிக்காமல் அதிமுகவினர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள் எங்கிருந்தாலும அழைத்து வந்து வாக்களிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு வேட்பாளர்களுடையது.

அரசியலுக்கு வந்து விட்டால் கோபப்படக்கூடாது. ஸ்டாலினைப் போல எடுத்த எடுப்பில் தலைவரானவன் நான் இல்லை. கிளைச் செயலாளரில் தொடங்கி இன்று இந்த உயரத்திற்கு வந்ததால் கீழ்நிலை நிர்வாகிகளின் கஷ்ட நஷ்டங்கள் என்னவென்று எனக்கு தெரியும். தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக திமுக ஆட்சி அமைந்துவிட்டது. அதனை அகற்ற மக்களும் தயாராகியுள்ளனர்.

திமுக அரசு மீது அரசு ஊழியர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து, இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும், எனக் கூறினார்.

Views: - 1028

0

0