நீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்-க்கு பின்னடைவா..? வாய்ப்பே இல்ல… அடுத்தகட்ட நகர்வு என்ன தெரியுமா..? கேபி முனுசாமி சொன்ன ரகசியம்!!

Author: Babu Lakshmanan
17 August 2022, 1:42 pm
Quick Share

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடு செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு கடந்த 10 மற்றும் 11ந் தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கபட்ட நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வெளியானது. அ.தி.மு.கவின் ஜூன் 23ந் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா..? அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்வதா..? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், ஜெயக்குமார், கோகுல இந்திரா, கே.பி. முனுசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, கே.பி. முனுசாமி பேசியதாவது :- தீர்ப்பின் முழுவிபரம் கிடைக்கப்பெறவில்லை; கிடைத்த பின்னர் விரிவாக பதில் அளிப்போம் என்று கூறினார். மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார்.

Views: - 439

0

0