அன்று இளையராஜா… இன்று எடப்பாடி பழனிசாமி… திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..!!
Author: Babu Lakshmanan10 June 2022, 8:44 am
மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோ பூஜை, கஜபூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தொன்மை வாய்ந்த தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.
இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம் இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வருகை புரிந்தார்.
அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் தலைமையில் மரியாதை செய்து வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற எடப்பாடி பழனிச்சாமி கோ பூஜை, கஜ பூஜை செய்த பின்னர் ஸ்ரீ கள்ளவாரண விநாயகர், சுவாமி, அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார்.
உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இருந்தனர்.
கடந்த வாரம் தனது பிறந்த நாளையொட்டி இசைஞானி இளையராஜா, தனது குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.