ஒரு பயனும் இல்லாத மக்களைத் தேடி மருத்துவ திட்டம் எதற்கு? வெறும் வெற்று விளம்பரமா? இபிஎஸ் காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 4:07 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை ஒரு பயனும் இல்லாத ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு அதற்கு பிரம்மாண்டமாய் துவக்க விழாவை தமிழக அரசு நடத்தி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை முடக்கி, ஒரு பயனும் இல்லாத ‘மக்களை தேடி மருத்துவம் ‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கு பிரம்மாண்டமாய் ஒரு துவக்க விழாவை திமுக அரசு நடத்தியது.

தற்போது அந்த திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தமிழக மக்களுக்கு தெரியவில்லை. கடந்த 14 மாத கால திமுக ஆட்சியில், அதிமுக அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கியதோடு அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் பணியை கண்ணும் கருத்துமாக மக்கள் நல்வாழ்வுத்துறை செய்து வருகிறது.

அரசு மருத்துவமனைகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கதாகும். வெற்று விளம்பரத்திற்காக மக்களை தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு, முதல்வரை வைத்து போட்டோ ஷூட் நடத்திவிட்டு மக்களை தேடி மருத்துவத்தை தேடி அலைய வைக்கும் போக்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி அரசியலை ஓரங்கட்டிவிட்டு மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘அம்மா மினி கிளினிக்’ மீண்டும் துவங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.

Views: - 382

0

0