கணக்கு காட்ட மட்டுமே கருத்துக்கேட்பு… மக்கள் கருத்தை மீறி மின்கட்டண உயர்வு ; தமிழக அரசு மீது சாடிய அன்புமணி ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
10 September 2022, 11:48 am
Quick Share

மக்கள் கருத்து கேட்டு, அதனடிப்படையில் மின்கட்டண உயர்வை அமல்படுத்தியதாக தமிழக அரசு கூறுவது முற்றிலும் பொய்யானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 200 முதல் 600 யூனிட்டுக்கும் அதிகமாக பயன்படுத்துவோரை பொறுத்து கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

இந்தப் புதிய மின்கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது!

மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் தான் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என கருத்துத் தெரிவித்தனர். அதன்பிறகும் மின்கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல!

மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு தேவையற்றது. மக்களின் இந்த மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 380

0

0