சுவாசிப்பதில் EVKS இளங்கோவனுக்கு பிரச்சனை… செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை : உடல்நிலை குறித்து வெளியான தகவல்!!

Author: Babu Lakshmanan
22 March 2023, 9:01 am
Quick Share

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெராவின் மறைவையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏவாக அவர் பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே, கடந்த 15ம் தேதி நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. கொரோனா பாதித்திருந்தாலும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவர் அவதிப்பட்டு வருவதாகவும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Views: - 1986

0

0