முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தினமும் விழா எடுப்பதே திமுக அரசின் நோக்கம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்..!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 1:13 pm
Quick Share

திமுக ஓராண்டு சாதனை இல்லை, வேதனை தான் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :- திமுக ஆட்சி நிர்வாக குறைபாடு ஏற்பட்டுள்ளது காவல்துறையில் தலையீடு இருப்பதால் திறமை வாய்ந்த காவலர்கள் பணியை செய்ய முடியவில்லை. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆன்லைன் ரம்மி மூலம் தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை நோக்கி காத்திருக்கிறார்கள். அதற்கு எந்த முயற்சியும் எடுத்தது போல் தெரியவில்லை. திமுக ஆட்சியில் தினம் தினம் விழா நடத்துவதும், விழா நாயகனாக முதல்வர் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது. அதற்காக மட்டுமே அரசு ஒட்டுமொத்தமாக கவனம் செலுத்துகிறது.

மக்களுக்கு சேவை செய்வதில் குறைபாடு உள்ளது. கடந்த ஒன்றை ஆண்டுகளில் நாட்டு மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டு வந்தார் என்று கேட்டால், பூஜ்ஜியம் மட்டுமே பதில். நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர் கொண்டு வந்த திட்டமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தின் பட்டப்பகலில் பெண்கள் சாலை நடமாட முடியவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது மின்சார கட்டணம், சொத்து வரி, மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாண்புமிகு முதல்வர், தற்போது மௌனமாக இருந்து வருகிறார். மக்களின் குறை நிறைகளை கனிவோடு கேட்கக் கூடியவர் தான் தலைசிறந்த தலைவராக இருக்க முடியும்.

யார் பேச்சும் கேட்க மாட்டேன். நான் சொல்வது தான் சட்டம் என இருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. திமுக ஓராண்டு சாதனை இல்லை, வேதனை தான் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளனர்.

Views: - 391

0

0