ஓபிஎஸ்க்கு திமுகவுடன் ரகசிய உறவு… அவர் விரைவில் பாஜகவில் இணைவார் : முன்னாள் அமைச்சர் வளர்மதி பகீர்..!!

Author: Babu Lakshmanan
28 June 2022, 1:32 pm
Quick Share

திருச்சி : திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது மகனுக்கும் உறவு இருப்பதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- 1972ல் அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா வலுவோடும், பொழிவோடும் வழிநடத்திச் சென்றார். அதற்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தையும் ஆட்சியும் சிறப்பாக நடத்தினார்.

மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி மீட்டெடுத்தார். தமிழகத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கருணாநிதி மற்றும் திமுக அமைச்சர்களை பாராட்டி பேசியது தொண்டர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.

தொகுதி பக்கம் செல்லாமல் இருக்கும் அவரது மகன் ரவீந்திரநாத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். ஆகவே, திமுகவுடன் தந்தை மகனுக்கு உறவு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த இயக்கத்தை பிளவுபடுத்த நினைக்கிறார்கள். எந்த கொம்பனாலும் அதிமுகவை பிளவுபடுத்த முடியாது. எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர முடியும்.

ஓ பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு இயக்கம் பிறக்க வாய்ப்பு இல்லை. அவர் பாஜகவுடன் சேர்ந்து விடுவார். திமுகவை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. தொண்ணூற்று ஒன்பது சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறார்கள். டிடிவி தினகரன் அதிமுக பற்றி பேச எந்த அருகதையும் இல்லை, என்று கூறினார்.

Views: - 413

0

0