‘ஜி ஸ்கொயர்‌’ நிறுவன மிரட்டல் விவகாரம்… வார பத்திரிகையின்‌ மீதான குற்றச்சாட்டு உண்மையா..? போலீஸார் வெளியிட்ட பரபர அறிக்கை…!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 11:00 am
Quick Share

தனியார்‌ கட்டுமான நிறுவனம்‌ குறித்து அவதூறு செய்தி பரப்பப்படும்‌ என பணம்‌ கேட்டு மிரட்டியதாக ஒருவர்‌ கைது செய்யப்பட்டது குறித்து சென்னை மாநகர காவல்‌ ஆணையரின்‌ அறிக்கை

சென்னையில்‌ ‘ஜி ஸ்கொயர்‌’ என்ற தனியார்‌ கட்டுமான நிறுவனம்‌ சார்பில்‌ அந்நிறுவன அலுவலர்‌ புருஷோத்தம்‌ குமார்‌ என்பவர்‌ கடந்த 21ம் தேதியன்று சென்னை மயிலாப்பூர்‌ காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ ஒன்றை அளித்திருந்தார்‌.

அப்புகாரில்‌, கெவின்‌ என்பவர்‌, ‘ஜி ஸ்கொயர்‌’ நிறுவனம்‌ குறித்தும்‌, அந்நிறுவனத்தின்‌ நிர்வாக இயக்குநர்‌ பாலா (எ) ராமஜெயம்‌ குறித்தும்‌, ஜூனியர்‌ விகடன்‌ இதழில்‌ அவதூறு செய்தி வெளியிடப்படும்‌ என்றும்‌, சமூக ஊடகவியலாளர்கள்‌ சிலர்‌ மூலம்‌ சமூக வலைதளங்களில்‌ அவதூறாக செய்தி பரப்பிவிடுவோம்‌ என்றும்‌ மிரட்டி, பணம்‌ கேட்பதாகத்‌ தெரிவித்து, நடவடிக்கை எடுக்கக்‌ கோரியிருந்தார்‌.

இந்த புகாரின்‌ அடிப்படையில்‌, மயிலாப்பூர்‌ காவல்‌ நிலைய குற்ற எண்‌.221/2022-இல்‌ வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின்‌ முதல்‌ குற்றவாளி கெவின்‌ கடந்த 22ம் தேதியன்று கைது செய்யப்பட்டார்‌. இந்த வழக்கின்‌ முதல்‌ கட்ட விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கெவின்‌ என்பவர்‌ 50 இலட்சம்‌ ரூபாய்‌ கேட்டு பிளாக்‌ மெயில்‌ செய்தது
விசாரணையில்‌ புலனாயிற்று. அதேபோன்று, அப்பத்திரிகையில்‌ பணிபுரியும்‌ சிலருடன்‌ பணப்‌ பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும்‌ கிடைத்துள்ளன. இதற்கும்‌ புகாரில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள குற்றத்திற்கும்‌ உள்ள தொடர்பு குறித்து புலன்‌ விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

எனினும்‌, இந்த முதல்‌ தகவல்‌ அறிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள ஜூனியர்‌ விகடன்‌ பத்திரிகையின்‌ இயக்குநர்கள்‌ உள்ளிட்ட சிலர்‌ மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்‌ இல்லை என்பதும்‌ தெரியவந்துள்ளது. அதன்படி இவர்களின்‌ பெயர்களை முதல்‌ தகவல்‌ அறிக்கையிலிருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்‌ கிடைத்துள்ள ஆதாரங்களின்‌ அடிப்படையில்‌ இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 528

0

0