‘அது நானா, எனக்கு ஞாபகம் இல்ல..?’ கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி பரபரப்பு சாட்சியம் ; நீதிமன்றத்தில் டுவிஸ்ட்…!!

Author: Babu Lakshmanan
25 November 2022, 1:34 pm
Quick Share

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் முன் சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில்,5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர் படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதனடிப்படையில் தற்போது நீதிபதிகள் முன்பாக சுவாதி ஆஜரானார். அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், மனசாட்டிக்கு உண்மையாக பதிலளிக்க வேண்டும் என்று புத்தகம் மற்றும் குழந்தைகள் மீதும் சத்தியம் வாங்கிய பின்சுவாதியிடம் நீதிபதிகள் விசாரணையை தொடங்கினர்.

அந்த சமயம் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான வீடியோவை போட்டுக்காட்டி, அந்த வீடியோவில் வருவது நீங்களா..? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், ‘அது நானா, எனக்கு ஞாபகம் இல்ல..?’ என்று கூறியதால் நீதிபதிகள் அதிர்ந்து போயினர். உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா என கேள்வி கேட்ட நீதிபதிகள், அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டு காட்டினர்.

தொடர்ந்து, சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜூடன் செல்வது நான் இல்லை என்று கதறி அழுது கண்ணீர் விட்டவாரே வாக்குமூலம் அளித்தார் சுவாதி.

Views: - 412

0

0