வார இறுதியில் ரூ.288 இறங்கி ஆறுதல் அளித்த தங்கம் : இருந்தாலும் வாங்குற நிலைமை இல்லை..!
8 August 2020, 11:05 amசென்னை : நாடு முழுவதும் தங்கம் வாங்கும் சூழல் இல்லாத நிலையிலும், இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கிறது. இதனால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துவிட்டது.
இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. கடந்த இரு வாரத்திற்கும் மேலாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. அதாவது, கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ. 5,380 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.288 சரிந்து ரூ. 43,040 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தொடர்ந்து, உச்சம் பெற்று வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்திருப்பது பொதுமக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்துள்ளது.