இந்தி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.. ஆனா, திமுகவுக்கு ஒரேவொரு கேள்வி..? அண்ணாமலை அதிரடி பேச்சு..!!

Author: Babu Lakshmanan
12 April 2022, 6:00 pm
Quick Share

தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதை தமிழக பாஜக ஏற்றுகொள்ளாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை மக்கள் ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவரது இந்தப் பேச்சு இந்தி பேசாத மாநிலங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா..?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதேபோல், இந்தியாவின் இணைப்புமொழி தமிழ்தான் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்திற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதை தமிழக பாஜக ஏற்றுகொள்ளாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது :- 1965ல் காங்கிரஸ் கட்சி இந்தியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். 1986ல் 2வது தேசிய கல்வியில் மீண்டும் அதனை திணித்தார்கள். இந்தியாவின் இணைப்புமொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரகுமானின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்மொழி பள்ளிகளை ஏற்படுத்த தமிழக அரசு முயலவேண்டும்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்புவரை கட்டாயம் தமிழில் படிக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது பாஜகதான். இங்கு எத்தனை பேர் இந்தி பேசுவார்கள் என்று தெரியாது, நான் இந்தி பேசமாட்டேன். அதேபோல, தமிழ் மொழியை இணைப்பு மொழியாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன..? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Views: - 728

0

0