ஜெயலலிதா மரணம் குறித்த மர்மம் விலகுகிறது? இன்று ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2022, 8:42 am
Arumugasamy - Updatenews360
Quick Share

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது.

ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணைம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.

இந்த அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. அரசிடம் இருந்து விரைவில் உரிய பதில் வரும் என ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்றோ அல்லது ஓரிரு நாட்களிலோ அரசின் பதில் கிடைக்கும் என்றும், அவ்வாறு பதில் கிடைத்ததும் நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரணம் குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 406

0

0