என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? திமுக அரசின் மீது நம்பிக்கை போய்விட்டது… முதல்ல சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக : அண்ணாமலை அதிரடி!!

Author: Babu Lakshmanan
17 July 2022, 2:16 pm
Quick Share

கள்ளக்குறிச்சியில் நடக்கும் வன்முறை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடலூர் – பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மாணவி தான் படித்து வந்த பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 5வது நாளாக மாணவியின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. தொடர்ந்து போலீசாரின் வானத்திற்கு தீ வைக்கப்பட்டது.

போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் நடக்கும் வன்முறை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai - Updatenews360

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்?. ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.

மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தமிழக பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 487

0

0