பாஜக பந்தோபஸ்துவுடன் பதவியேற்க வந்த காங்கிரஸ் உறுப்பினர்.. அதிர்ச்சியில் திமுக உறுப்பினர்கள் : தாமரைக்குளத்தில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
2 March 2022, 11:42 am
Quick Share

தென்தாமரைகுளம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாஜக -திமுக வினர் இடையே கடுமையான மல்லு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 4 வார்டுகளில் பாஜகவும், 3 வார்டுகளில் அதிமுகவும், 3 வார்டுகளில் திமுகவினரும், 4 வார்டுகளில் சுயேட்சை கவுன்சிலர்களும், 1 வார்டில் காங்கிரஸ் கவுன்சிலரும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற மல்லிகா என்ற பெண் கவுன்சிலர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தலைமறைவானார். இதனையடுத்து, கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் கவுன்சிலர் வருகையை எதிர்பார்த்து பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு திமுகவினர் திரண்டிருந்தனர்.

அப்போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தளவாய்சுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் புடைசூழ 4 பாஜக கவுன்சிலரும், 3 அதிமுக கவுன்சிலரும் அவர்களுடன் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மல்லிகாவும் வந்தார்.

இதனால், பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பாஜக – திமுக நிர்வாகிகளுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் உறவினர் மல்லிகாவை தாக்க முயற்சித்தார் .இதனால் அங்கு மேலும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் விலகி விட்டனர். பின்னர், தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மட்டுமே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பேரூராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் .

இதர அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும் பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதிக்கபடவில்லை. பேரூராட்சி அலுவலகத்தை முற்றிலும் போலீஸ் தன் கைவசப்படுத்தியது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டு வருகிறது.

Views: - 1307

0

0