சாக்கடை தண்ணீருடன் கான்கிரீட் போடும் ஊழியர்கள்… வேலூரை தொடர்ந்து கரூரில் நடந்த அவலம்.. அதிகரிக்கும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியம்..!!
Author: Babu Lakshmanan11 August 2022, 2:23 pm
கரூர் மாநகராட்சி பகுதிகளில் அவசர கதியில் சாக்கடை தண்ணீருடன் காங்கிரிட் போடுவதாக வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் உள்ள கே.ஏ நகரில் சாக்கடை கட்டும் பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. சாக்கடையின் இரு பக்கவாட்டு சுவர்கள் கட்டப்பட்டும், அதன் அடிப்பரப்பு பகுதியில் கான்கிரிட் தளம் அமைக்கப்படாமல் இருந்துள்ளது. அப்பகுதி பொதுமக்கள் பல நாட்களாக மாநகராட்சியில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அங்கு வந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அவசர கதியில் சாக்கடையின் அடிப்பகுதியில் கான்கிரிட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சாக்கடையில் ஓடும் கழிவு நீரை முழுவதுமாக கூட அகற்றாமல் அப்படியே தள்ளிக் கொண்டு காங்கிரிட் கலவையை கொட்டி பணிகளை முடித்துள்ளனர். தற்பொழுது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, வேலூரில் பைக்குடன் சிமெண்ட் ரோடு போட்ட சர்ச்சை பூதாகரமானது. இந்த சூழலில், நேற்று கூட மீண்டும் வேலூரில் குடிநீர் அடிபம்புடன் கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் கைது செய்ததுடன், ஒப்பந்தத்தையும் ரத்து செய்ததுடன், அந்நிறுவனத்தை பிளாக் லிஸ்ட்டில் போட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் மாநகராட்சியில் சாக்கடையின் கட்டுமானப் பணியில் அலட்சியம் காட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள், இனி டெண்டரை தகுதி வாய்ந்த நபர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
0
0