நடிகர் சூரியிடம் நிலமோசடி செய்த விவகாரம்: திமுக ஊராட்சி மன்றத்தலைவர் உட்பட 2 பேரிடம் விசாரணை..!!
17 November 2020, 4:51 pmSoori at Marudhu Press Meet
சென்னை: நடிகர் சூரியின் நிலமோசடி புகார் தொடர்பாக சிறுசேரி திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது சகோதரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சூரி புகார் மனு ஒன்றினை அளித்தார்.
இந்நிலையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரமேஷ் என்பவர் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஆவார். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக தனக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி இருந்தது என்றும், அதை திருப்பிக் கேட்ட போது நிலம் வாங்கித் தருவதாக கூடுதல் பணம் பெற்று ஏமாற்றியதாகவும் சூரி புகார் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் சூரியிடம் ஏமாற்றி விற்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இடத்தை, வீட்டு மனைக்கான நிலம் என சான்றிதழ் அளித்த சிறுசேரி திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம் மற்றும் அவரது சகோதரர் வெங்கடேசனிடமும் அடையாறு குற்றப்பிரிவு போலீசார் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.