நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம் ; பாஜகவினரால் முன்னாள் நிர்வாகி சரவணனுக்கு எழுந்த சிக்கல்..!!

Author: Babu Lakshmanan
19 August 2022, 4:56 pm
Quick Share

மதுரை : நிதி அமைச்சர் காரில் காலணி வீசிய சம்பவத்தில் பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணனுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த 13ம் தேதி மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நிதி அமைச்சருக்கும், பாஜகவினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து வந்த போது அவரது காரை முற்றுகையிட்ட பாஜகவினர், அவரது காரில் காலணியை வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால், மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், காலணி வீசிய சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்ததாக பாஜக முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணனை கைது கோரி, தற்போதையை பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாரிடம் மனு அளித்தனர்.

ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்தபோது நிதி அமைச்சர் இவர்களை யார் அனுமதித்தது, இங்கு வர என்ன தகுதி உள்ளது என கூறியதால் பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது, உடனடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கூறியபோது, கட்சியினர் மாண்புடன் நடந்து கொள்ள வலியுறுத்தியதாகவும், ஆனால் டாக்டர் சரவணன் மாண்பை மீறி நிதி அமைச்சரின் காரின் காலணியை வீசும் சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்ததாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 512

0

0