‘என்னை விட சிறந்த தலைவர தேர்வு செய்யுங்க’… நழுவிய காந்தியின் பேரன் : குடியரசு தலைவர் தேர்தலில் அலைமோதும் எதிர்கட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 7:05 pm
Quick Share

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட, மற்றுமொரு தலைவர் மறுப்பு தெரிவித்திருப்பது எதிர்கட்சியினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தாலும், அபாரமான அரசியல் நகர்த்தல்களாலும் தேசிய அளவில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. தேசிய அளவில் 2வது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது பாஜகவை தோற்கடிக்கும் திறன் இல்லை. எனவே, 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை பாஜக ஏற்கனவே தொடங்கி விட்டது.

இந்த சூழலில், எதிர்கட்சிகளை ஒன்றிணைத்தால் மட்டும் பாஜகவை நெருங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, பாஜக ஆளாத மாநில தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

அதேவேளையில், கட்சியை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருந்து வருகிறது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பதை தற்போது காங்கிரசும் நம்பத் தொடங்கி விட்டது.

இதனிடையே, வரும் ஜுலை 18ம் தேதி குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. எனவே, பாஜகவுக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த முடிவாக உள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக சரத் பவார் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தன. ஆனால், பாஜகவை தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து, அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதைத் தொடர்ந்து, எதிர்கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிட காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவும் மறுப்பு தெரிவித்து விட்டார். இது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில், மற்றொரு தலைவரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி, எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛மிக உயர்ந்த பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், எதிர்க்கட்சியின் வேட்பாளர் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒருவராக இருக்க வேண்டும்’ எனக் கூறியதுடன் தன்னை விட சிறப்பு வாய்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோபாகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜகவை எதிர்த்து போட்டியிட முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், வேறு யாரை நிறுத்தலாம்..? என்று வரும் 21 ஆம் தேதி நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

Views: - 516

0

0