பெண்ணின் வாக்கை கள்ள ஓட்டாக போட்ட சம்பவம்… அதிகாரிகளுடன் உறவினர்கள் கடும் வாக்குவாதம்… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
19 February 2022, 12:27 pm
Quick Share

மயிலாடுதுறை அருகே பெண் ஒருவரின் வாக்கை, யாரோ கள்ள ஓட்டாக போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. மக்களும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. அதில், 10வது வார்டு கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், வாக்கச்சாவடி எண்.12ல் ஈவேரா தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி செல்வி என்ற பெண் வாக்களிக்க வந்துள்ளார்.

அப்போது, அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், தான் வாக்களிக்க வில்லை என அந்தப் பெண் அதிகாரிகளிடம் கூறினார். பின்னர், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் ஸ்லிப்பில் பிரிண்ட் சரியாக இல்லை என்றும், முகக்கவசம் அணிந்து வருவதால் வாக்காளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்ணுக்கு மாற்று ஓட்டு வழங்கப்பட்டது.

Views: - 699

0

0